செந்தில்பாலாஜி பின்னணியில் தவெக ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் - இதுவரை 6 பேர் கைது!
தமிழகத்தில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை வீழ்த்த முற்பட்டதாகக் கூறப்படும் சதி வழக்கில், மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ள அதிர்ச்சியூட்டும் அதிகாரப்பூர்வ விபரங்களைச் சென்னை மாநகரக் காவல் துறை வெளியிட்டுள்ளது. ஊத்தங்கரை தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ந. இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசி மிரட்டல் விடுத்த விவகாரத்தில், இதுவரை மொத்தம் 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்து வரும் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் மற்றும் தனிப்படையினர் நடத்திய அதிரடிப் புலனாய்வின் அடிப்படையில், சென்னை மாநகரக் காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் ஆகியோர் நேரடியாகக் கூறியதன் பேரில் தான், யூடியூபர் ஐபிடிஎஸ் திருநாவுக்கரசு இந்த ரூ.35 கோடி குதிரை பேரத்தை நடத்தியுள்ளார் என்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது.

தமிழகச் சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகவும், ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தாலும் அந்த வாக்கெடுப்பின் போது தங்களுக்குச் சாதகமாகச் செயல்பட வேண்டும் என்றும், அதற்காக ரூ.35 கோடி தருவதாகவும் திருநாவுக்கரசு ஆசைவார்த்தை காட்டியுள்ளார்.
இதற்கு எம்.எல்.ஏ இளையராஜா மறுப்பு தெரிவித்து எச்சரித்த போது, இந்த விபரங்களை வெளியே கூறினால் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்று திருநாவுக்கரசு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் திருநாவுக்கரசு குறித்த கூடுதல் பின்னணித் தகவல்களும் தற்பொழுது வெளிவந்துள்ளன.

கைதான திருநாவுக்கரசு, 'லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள்' என்ற பெயரைக் குறிப்பிட்டு, கடந்த காலங்களில் தேர்தலுக்குத் தேர்தல் பல்வேறு கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கரூரைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமானவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்களோடு சேர்த்து இந்த சதி விவகாரத்தில் இதுவரை மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே விவகாரம் தொடர்பாகத் தவெக அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்த போது எதிர்க்கட்சிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். "திமுகவும், அதிமுகவும் திரைமறைவில் கைகோர்த்துக் கொண்டு தவெக ஆட்சியை வீழ்த்தித் தற்காலிகக் கூட்டணி ஆட்சி அமைக்க முயன்றதால் தான், அந்த கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்கள் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை பலரும் தவெக-வில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். மக்கள் செல்வாக்கு இல்லாததால், இன்னும் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள்." கரூரில் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் இல்லத்தில் நடந்த போலீஸ் சோதனை என எதிர்க்கட்சியான திமுகவிற்குச் சட்ட ரீதியான முட்டுக்கட்டைகள் விழுந்து வரும் நிலையில், இந்த 6 பேர் கைது நடவடிக்கை தமிழக அரசியல் களத்தில் மிகப்பாரிய பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.
