காதல் பெயரில் கொடூரம்... இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த காதலன்!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சந்தன் நகர் பகுதியில், காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ஆத்திரத்தில் காதலன் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாலில் ஒன்றாக வேலை பார்த்தபோது திலீப் ரத்தோடு என்பவனும் 22 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி அந்தப் பெண் வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறி நுழைந்த திலீப், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணின் கழுத்தை ஓங்கி அறுத்துவிட்டுத் தப்பியோடினான்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய அந்தப் பெண், தனது தம்பிக்கு வீடியோ கால் செய்து தனக்கு நேர்ந்த கொடுமையை உருக்கமாகக் கூறிவிட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணால் பேச முடியாத நிலை ஏற்பட்ட போதிலும், மனம் தளராமல் ஒரு காகிதத்தில் 'திலீப் ரத்தோடு' என்று எழுதித் தன் மீது தாக்குதல் நடத்திய கயவனை அடையாளம் காட்டினார். இந்தத் துணிச்சலான செயல் குற்றவாளியை விரைவாகக் கண்டறிய போலீசாருக்குப் பேருதவியாக இருந்தது.

தற்போது அந்த இளம்பெண் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடி வரும் நிலையில், தலைமறைவாக இருந்த காதலன் திலீப்பை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காதலின் பெயரால் அரங்கேறியுள்ள இந்த வன்முறைச் சம்பவம் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. இது போன்ற கொடூரச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனப் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
