சிலிண்டர் விலை உயர்வு... நாளை மத்திய அரசு அலுவலகங்கள் முன் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி, வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசின் பல்வேறு மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும் நாளை (மே 7) தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக உள்ளிட்ட தோழமை கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கடந்த சில நாட்களாகவே வணிக சிலிண்டர் விலை படிப்படியாக உயர்ந்து வந்த நிலையில், தற்போது ஒரேடியாக 993 ரூபாய் உயர்த்தப்பட்டு, 3,237 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த அதிரடி விலை உயர்வால் ஹோட்டல்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. மேலும், உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இது சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எனப் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த விலை உயர்வைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் (ML) ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளன. சிலிண்டர் விலை உயர்வுடன் சேர்த்து, ரயில்வே துறையில் பணியிடக் குறைப்பைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்துள்ளனர். மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.
