நடவடிக்கைகளைக் கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்திய மாமனாரைக் கூலிப்படை கொலை செய்த மருமகள் !

 
ஷாலு

 

உத்தரப் பிரதேசத்தில், தனது நடமாட்டத்தைக் கண்காணிக்க வீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்திய மாமனாரைக் கூலிப்படை ஏவிக் கொலை செய்த மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

 

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷாலு என்ற பெண்ணின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் அவரது மாமனார் வீட்டில் 4 சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியிருந்தார். மேலும், ஷாலு இரவு நேர பார்ட்டிகளுக்குச் செல்வதற்குத் தடை விதித்ததோடு, அவரது செலவுகளுக்குப் பணமும் தர மறுத்துள்ளார். இதனால் தனது மாமனார் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த ஷாலு, அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.இதற்காக அவர் கூலிப்படையை நாடியுள்ளார். கொலை திட்டத்தின் போது யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, தன் கணவருடன் சேர்ந்து பார்ட்டிக்குச் சென்றுள்ளார். அங்கு இருந்தபடியே தன் கைப்பேசி மூலமாக வீட்டிலிருந்த கொலையாளிகளுக்கு வழிகாட்டி, மாமனாரைக் கொடூரமான முறையில் 26 முறை கத்தியால் குத்திக் கொல்லச் செய்துள்ளார்.

 

கொலை அரங்கேறிய பிறகு வீட்டிற்குத் திரும்பிய ஷாலு, எதுவும் அறியாதது போல் நடித்துக் கதறி அழுதிட முயன்றுள்ளார். ஆனால், காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் அவர் செய்த சதித்திட்டம் அம்பலமானது. இதனையடுத்து மாமனாரைக் கூலிப்படை வைத்துத் தீர்த்துக்கட்டிய மருமகள் ஷாலுவை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.