மருமகளின் ‘ரீல்ஸ்’ மோகம்... மனமுடைந்த மாமனார், மாமியார் தற்கொலை!
அரியானா மாநிலம் பானிபட் அருகே, மருமகளின் சமூக ஊடக மோகத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறு இரண்டு உயிர்களைப் பறித்துள்ள சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அரியானாவின் பானிபட் பகுதியில் பாரம்பரியமிக்க கிராமம் ஒன்றில் வசித்து வந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சுமன். இவர்களது மருமகள் சினேகா, சமூக ஊடகங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். சினேகா குட்டை பாவாடை அணிந்து 'ரீல்ஸ்' வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளார். பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்த மாமனார் ராஜேஷ் மற்றும் மாமியார் சுமன் இதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாகக் குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. சமீபத்தில் ஏற்பட்ட மோதலின் போது, சினேகா தனது மாமனார் மற்றும் மாமியாரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மருமகளின் இத்தகைய செயல்பாடுகளாலும், ஊர் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அவமானத்தாலும் மனமுடைந்த ராஜேஷ் மற்றும் சுமன் இருவரும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மருமகள் சினேகாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக ஊடக மோகத்தால் ஒரு குடும்பமே சிதைந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
