டெல்லியில் பயங்கரவாதச் சதி முறியடிப்பு: தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் 9 பேர் கைது; வெடிபொருட்கள் பறிமுதல்!

 
டெல்லி போலீசார் பயங்கரவாதிகள் டெல்லி போலீசார் பயங்கரவாதிகள்

தமிழகத்தில் திருச்சி மற்றும் விருதுநகரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விடிய விடிய அதிரடிச் சோதனை நடத்தி வரும் வேளையில், நாட்டின் தலைநகரான புதுடெல்லியில் மிகப்பெரிய அளவில் இரத்தக் களரியை ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்த சர்வதேச பயங்கரவாதச் சதித் திட்டம் ஒன்றை டெல்லி போலீசாரின் சிறப்புப் படை அதிரடியாக முறியடித்துள்ளது.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ (ISI) மற்றும் மும்பை அண்டர்வேர்ல்ட் தாதா தாவூத் இப்ராஹிமின் 'டி-கம்பெனி' நெட்வொர்க்குடன் நேரடித் தொடர்பில் இருந்த 9 பயங்கரவாத முகவர்களைப் போலீசார் கூண்டோடு கைது செய்துள்ளனர்.

டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இந்த 9 பேர் கொண்ட பயங்கரவாதக் கும்பல், எல்லைக்கு அப்பால் உள்ள பாகிஸ்தான் கையாட்களின் உத்தரவின் பேரில் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபடப் பல மாதங்களாகத் திட்டமிட்டு வந்துள்ளனர்.

டெல்லி போலீஸ்

நாட்டின் மிக முக்கிய அணுமின் நிலையங்கள், சர்வதேச விமான நிலையங்கள், முக்கிய ரயில் நிலையங்கள், டெல்லியில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களைக் குறிவைத்துத் தொடர் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்த இவர்கள் சதித் திட்டம் தீட்டியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு தற்பொழுது நேரடியாகத் தங்களது ஆட்களை அனுப்பாமல், உள்நாட்டிலேயே உள்ள சிலரின் மூளைச்சலவை செய்து, மும்பை பாதாள உலக நெட்வொர்க் வழியாக அவர்களுக்கு நிதியுதவி மற்றும் நவீன ஆயுதங்களை வழங்கி நாசவேலைகளுக்குப் பயன்படுத்திய அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. கைதானவர்களில் நேபாளத்தைச் சேர்ந்த சில முகவர்களும் அடங்குவர் எனத் தெரிகிறது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள்

நம்பகமான ரகசிய உளவுத் தகவல்களின் அடிப்படையில், டெல்லி போலீஸின் சிறப்புப் படை அதிகாரிகள் டெல்லி மற்றும் மும்பையின் சில பதுங்குவிடங்களை அதிரடியாகச் சூழ்ந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த 9 பேரையும் வளைத்துப் பிடித்தனர். கைதானவர்களிடம் இருந்து அதிநவீனத் தானியங்கிப் பிஸ்டல்கள், பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட பலத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடிய கைக்குண்டுகள் மற்றும் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் ஆகியவற்றை அதிகாரிகள் தற்பொழுது பறிமுதல் செய்துள்ளனர். இதன் மூலம் தலைநகரில் நிகழவிருந்த மிகக் கொடூரமான அசம்பாவிதம் நூலிழையில் முறியடிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் துருக்கியில் இருந்து தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியான முகமது சலீம் டோலா என்பவரை இந்தியப் பாதுகாப்பு முகமைகள் வெற்றிகரமாகக் கைது செய்து நாட்டிற்குக் கொண்டு வந்த நிலையில், தற்பொழுது இந்த 9 பேரின் கைது மிக முக்கியப் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து டெல்லி, மும்பை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் தற்பொழுது பாதுகாப்பு அசுர அளவில் பலப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்குப் பின்னால் உள்ள சர்வதேச 'ஹவாலா' பணப் பரிவர்த்தனை மற்றும் உள்ளூர் கூட்டாளிகள் யார் என்பது குறித்து டெல்லி போலீஸார் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.