அதிர்ச்சி!! ஹிஜாப் அணிந்து வந்ததால் தேர்வு எழுத அனுமதி மறுப்பு!!
தமிழகம் முழுவதும் தக்ஷிணா பாரத் இந்தி பிரச்சார சபா ஆண்டுக்கு 2 முறை இந்தி தேர்வுகளை நடத்தி சான்றிதழ்களை வழங்கி வருகிறது . அதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் ஆகஸ்ட் 12 மற்றும் 13ம் தேதிகளில் பிரவேசிகா தேர்வு நடத்தப்பட்டது. பிராத்மிக் தேர்வு நேற்று நடைபெற்றது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கான தேர்வு மையம், கீழ்பென்னாத்தூர் அடுத்த சோமாசிபாடி புதூரில் உள்ள அண்ணாமலை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த தேர்வு மையத்தில் 540 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். திட்டமிட்டபடி காலை சரியாக 10 மணிக்கு தேர்வுகள் தொடங்கின. அதில், தனியார் பள்ளியில் அரபிக் ஆசிரியராக பணிபுரியும் திருவண்ணாமலை கரிகாலன் தெருவில் வசித்து வரும் ஷபானா ஹிஜாப் அணிந்தபடி தேர்வு எழுதிக்கொண்டிருந்தார். தேர்வு தொடங்கி சுமார் 10 நிமிடங்கள் கடந்து விட்ட நிலையில், தேர்வு மைய கண்காணிப்பாளர், ‘ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதக்கூடாது’ எனக் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷபானா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆனால் கண்காணிப்பாளர் ஒத்துக்கொள்ளவே இல்லை. இதனால் கோபத்துடன் தேர்வு அறையில் இருந்து வெளியேறினார். இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டதும் எஸ்டிபிஐ அமைப்புகளை சேர்ந்த பலர் தேர்வு மையத்துக்கு சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் பிறகு ஷபானாவுக்கு தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும், ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி மறுத்து மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியதால், தொடர்ந்து தேர்வு எழுத விரும்பவில்லை . இதனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள இருப்பதாகவும் எழுதி கொடுத்துவிட்டு ஷபானா தேர்வு மையத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க