பல் மருத்துவர் மற்றும் தாயைப் படுகொலை செய்த சகோதரர்... சொத்துத் தகராறில் கொடூரம்... !
சென்னை அண்ணா நகர் கிழக்கு பகுதியில் சொத்துத் தகராறு காரணமாகத் தாய் மற்றும் அவரது இளைய மகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஷ்ரப் நிஷா மற்றும் அவரது இளைய மகனும் பல் மருத்துவருமான 42 வயதான டாக்டர் அஷ்ரப் அகமது ஆகியோர் இந்த கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தனர். நீண்ட நாட்களாக நிலவி வந்த சொத்து விவகாரம் காரணமாக இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் இரு உடல்கள் கிடப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து அண்ணா நகர் போலீசார் உடனடியாக விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்கு வந்த மருத்துவக் குழுவினர் பரிசோதித்து அவர்கள் இறந்துவிட்டதை உறுதி செய்ததை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்தவர்களின் உடல்களில் பலத்த காயங்கள் காணப்பட்டதால் போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

தொடர் விசாரணையின் அடிப்படையில் கொல்லப்பட்ட பெண்ணின் மூத்த மகன்கள் இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சொத்து தகராறு காரணமாகத் தாயையும் தம்பியையும் தாமே கொலை செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டதாகப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுச் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
