முதல்வர் விஜய்க்கான புதிய அலுவலக டெண்டரில் விதிமீறல் - பின்னணி விவரங்கள்!
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் அமையவுள்ள முதலமைச்சர் தவெக தலைவர் விஜய்யின் புதிய அலுவலகப் பணிக்காகக் கோரப்பட்ட ரூ.5.54 கோடி மதிப்பிலான டெண்டரில் விதிமீறல்கள் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
'தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற டெண்டர் சட்டப்படி' ரூ.2 கோடிக்கும் அதிகமான மதிப்பீடு கொண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆனால், சேப்பாக்கம் கட்டிடக் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டக் கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட இந்த டெண்டருக்கு 15 நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.5.54 கோடி மொத்த திட்ட மதிப்பீட்டை ரூ.2.41 கோடி, ரூ.2.01 கோடி, ரூ.1.12 கோடி என 'ஏ', 'பி', 'சி' என 3 தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்து நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், அதில் இரண்டு பிரிவுகள் ரூ.2 கோடிக்கு மேல் இருந்தும் 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்படவில்லை.
நாளிதழ்களில் விளம்பரம் வெளியான மறுநாளே டெண்டர் ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்ற விதி மீறப்பட்டுத் தாமதமாகவே பதிவேற்றப்பட்டதாகவும், இணையதள ஆவணங்களில் திட்ட மதிப்பீடு குறித்த விவரங்கள் தெளிவுபடுத்தப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கோட்டை பாரம்பரியக் கட்டடத்தில் இயங்கி வரும் முதலமைச்சர் அலுவலகத்தில் நிலவும் இடநெருக்கடி மற்றும் நிர்வாக வசதிகளைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் அறை, தனிச் செயலாளர்களின் அலுவலகங்கள் மற்றும் ஆலோசனைக் கூட்ட அரங்கம் ஆகியவை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தலைமைச் செயலகத்தில் உள்ள பாரம்பரியமிக்க கோட்டை கட்டடத்திலிருந்து நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு முதலமைச்சர் அலுவலகத்தை மாற்றுவதற்கான காரணங்கள் மற்றும் பின்னணிகளை இந்த வீடியோ விரிவாக விளக்குகிறது.
