மே 2 முதல் காவலர்கள் அனைத்து விடுமுறைகளும் ரத்து - டிஜிபி அவசர உத்தரவு!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் வரும் மே 4-ம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் (DGP Shankar Jiwal) ஒரு முக்கியமான அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
வரும் மே 2-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை யாருக்கும் விடுப்பு கிடையாது. தற்போது விடுப்பில் இருக்கும் காவலர்களும் மே 2-ம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் விடுப்பினை நீட்டிக்கக் கூடாது.

மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, கல்வி விடுப்பு மற்றும் மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களுக்கு மட்டும் இந்த உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூம் பகுதிகளில் ஏற்கனவே துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பில் உள்ளனர். மே 2 முதல் காவலர்கள் அனைவரும் பணிக்குத் திரும்புவதன் மூலம், வாக்கு எண்ணிக்கை நாளில் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் முடிவுகளை அறிவிக்கப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மறு உத்தரவு வரும் வரை அனைத்து காவலர்களும் தங்களின் தலைமையகத்திலேயே இருக்க வேண்டும் என்றும், அவசரத் தேவைகளுக்கு உயர்மட்ட அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும் என்றும் டிஜிபி தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
