மாயமான அலெக்ஸி உடல் கண்டுபிடிப்பு... காயங்கள் இருந்ததாக புகார்!
ரஷ்ய ஜனாதிபதி புடினை கடுமையாக விமர்சித்து வந்தவரும், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருமான அலெக்ஸ் நவல்னி திடீரென சிறையில் உயிரிழந்ததாக வெளியான தகவல், உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அலெக்ஸி உயிரிழந்தது குறித்து எந்தவிதமான காரணங்களும் தெரிவிக்கப்படாதது பலத்த சர்ச்சையைக் கிளப்பியது.அலெக்ஸி தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி புடினை விமர்சித்து வந்ததால், மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள், அலெக்சியின் மரணத்துக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் தான் காரணமாக இருக்கக்கூடும் என குற்றம் சாட்டினர். ரஷ்யாவில், புடினை எதிர்த்து பேசுபவர்கள் மாயமாவதும், சிறையிலடைக்கப்படுவதும், உயிரிழப்பதும் வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது என்று மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
இந்நிலையில், உயிரிழந்த அலெக்சியின் உடலை வாங்குவதற்காக அவரது தாயார் பிணவறைக்குச் சென்றதாகவும், அங்கு அதிகாரிகள், அலெக்ஸியின் உடல் இல்லை என்று கூறி விட்டதாகவும் தகவல் வெளியாகி அலெக்ஸியின் மரணம் குறித்து மேலும் சர்ச்சையை அதிகரித்தது. தற்போது, அலெக்ஸி அடைக்கப்பட்டிருந்த சிறையின் அருகே இருக்கும் மருத்துவ உதவிக்குழுவினர் சிலர், தாங்கள் உயிரிழந்த அலெக்ஸியின் உடலைப் பார்த்ததாகவும், அலெக்ஸியின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அலெக்ஸியின் மரணத்திற்கான காரணத்தை இதுவரையில் சிறை அதிகாரிகள் வெளியிடவில்லை. அவர் உடலில் காயங்கள் ஏதும் இல்லை என்று கூறி வருகிறார்கள். அதே சமயம் அதிகாரிகள் கூறுவது பொய் என்று கூறும் அலெக்ஸியின் தாயார், அலெக்ஸியின் உடலை இதுவரையில் தன்னிடம் தரவில்லை என்றும், உடலைத் தராமல் இருப்பதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் ரஷ்ய அரசாங்கம் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.