பாகிஸ்தான் நாடாளுமன்றம் திடீர் கலைப்பு!! பரபரக்கும் அரசியல் !!
2018ல் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. இம்ரான் கான் பிரதமராக 4 ஆண்டுகள் பொறுப்பேற்று நடத்தினார். திடீரென கூட்டணி கட்சிகள் அவருக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றனர். பெரும்பான்மையை இழந்ததால் இம்ரான்கான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்து பாகிஸ்தான் பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று கொண்டார். அதன்பிறகு இம்ரான் கான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இம்ரான்கான் மீது நில முறைகேடு, கருவூல மோசடி குறித்த விசாரணைகள் நடத்தப்பட்டன. கருவூல மோசடி வழக்கில் இம்ரான் கானுக்கு சில நாட்களுக்கு முன்பு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையால் இம்ரான் கான் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், நேற்று நள்ளிரவில் கலைக்கப்பட்டது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரையின் பேரில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் ஆரிப் ஆல்வி தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தி முடிக்க 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் காபந்து அரசை வழிநடத்த பிரதமரை தேர்வு செய்ய 3 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போதைய சூழலில் காபந்து அரசு தேர்தலை ஓராண்டு காலம் வரை தள்ளிப் போடலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது. பரபரப்பான அரசியஸ் சூழலில் தேர்தலை நடத்துவதை காட்டிலும் காபந்து அரசாக செயல்பட்டு, நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு, அரசியல் சீரமைப்பு இவைகளை மேற்கொள்ளலாம் என பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?