பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் தொடர்பில்லை - டொனால்ட் டிரம்ப் விளக்கம்!
ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு ஆவணங்களில் தனது பெயர் இடம்பெற்றது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதன்முறையாகப் பதிலளித்துள்ளார்.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் கரீபியன் பகுதியில் 'பாவத்தீவு' என்ற தனித்தீவை விலைக்கு வாங்கி, அங்கு சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர். இந்த விவகாரத்தில் டிரம்ப், பில் கேட்ஸ், பில் கிளிண்டன் மற்றும் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்ட பலருக்குத் தொடர்பு இருப்பதாகப் புகார்கள் எழுந்தன.
எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டு அமெரிக்கச் சிறையில் இருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்தார். டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையேயான மோதலுக்குப் பிறகு, எப்ஸ்டீன் வழக்கு ஆவணங்களை வெளியிட எதிர்க்கட்சியினர் அழுத்தம் கொடுத்தனர். அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட 35 லட்சம் பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்களில், டிரம்ப்பின் பெயர் 3,000-க்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் பின்வரும் விளக்கங்களை அளித்துள்ளார்: எப்ஸ்டீன் ஒரு மோசமான நபர் என்று தெரிந்தவுடன், 20 ஆண்டுகளுக்கு முன்பே அவருடனான நட்பைத் துண்டித்துவிட்டதாகக் கூறியுள்ளார். தனது புளோரிடா கிளப்பில் இருந்தும் அவரை வெளியேற்றியதாகத் தெரிவித்துள்ளார். எப்ஸ்டீன் தனது அரசியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆவணங்களில் ஜனநாயகக் கட்சியினரின் பெயர்களே அதிகம் இருப்பதாகவும், அவர்களைக் காப்பாற்றவே ஆவணங்கள் இவ்வளவு காலம் மறைக்கப்பட்டதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஜெனிவாவில் நடைபெற உள்ள அமெரிக்கா - ஈரான் இடையேயான அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் தான் மறைமுகமாக ஈடுபடப் போவதாகவும், ஈரான் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரும்பும் எனத் தான் நம்புவதாகவும் டிரம்ப் இச்சந்திப்பில் தெரிவித்தார்.
