இந்த பேச்சுத் திமிரும், வக்கிரமும் வேண்டாம்... இயக்குநர் அமீருக்கு ஆதரவாக களமிறங்கிய பொன்வண்ணன்!
இந்த பேச்சு திமிரும், வக்கிரமும் வேண்டாம் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் பேச்சுக்கு, இயக்குநர் அமீருக்கு ஆதரவாக நடிகர் பொன்வண்ணன் கண்டனம் தெரிவித்து முகநூலில் பதிவிட்டுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் அமீரைத் திருடன் என்கிற ரீதியிலும், நடிகர் சூர்யா தான் அமீருக்கு வாய்ப்பு கொடுத்தார் என்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசிய வீடியோ திரையுலகில் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், திரையுலகில் நடிகர்கள் சசிக்குமார், சமுத்திரக்கனி, தயாரிப்பாளர்கள் சிவா, தாணு என பலரும் அமீருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் பொன்வண்ணன், ‘பருத்திவீரன்’ திரைப்படம் பற்றிய தயாரிப்பாளர் ஞானவேல் அவர்களின் சமீபத்திய ஊடகப் பேட்டியைப் பார்த்தேன். அத்திரைப்படத்தில் நடிகனாக மட்டுமல்லாமல், நான் பல்வேறு நிலைகளில் பங்காற்றியவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தர கடமைப்பட்டுள்ளேன் என்று முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அத்திரைப்படம் ஆரம்பித்து முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. அதற்கான முழுமையான காரணம் எங்களுக்கு அப்போது தெரியவில்லை. அதன்பின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்புகள் தொடங்கிய போது, அமீர் அவர்கள் பொறுப்பேற்று, பல நண்பர்கள், உறவினர்கள் மூலமாக கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளை செய்தார் என்பதை நானறிவேன். பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு தொடர்ந்தது.
இதனால்தான், பணத்துக்காக தனது ‘படைப்புக்கு என்றும் துரோகம் செய்பவரல்ல அமீர் என்பதை நான் அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாக சொல்லமுடியும். படம் வெளியாகி உலக அளவிலும், இந்திய சினிமாவிலும், படைப்பு ரீதியாகவும், தொழில்நுட்பமாகவும், விமர்சனங்களாலும், வசூல்ரீதியாகவும், அதில் பங்குபெற்ற கலைஞர்களுக்கும் கிடைத்த தேசிய விருது அங்கீகாரங்காளாலும் அது பெற்ற இடமோ உயரியது.
படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே, பொருளாதாரம் சார்ந்து இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, வெளியீட்டுக்கு பின்பும், திரைத்துறை சார்ந்த பல்வேறு சங்கங்கள் தலையிட்டும் பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிற இந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் தனது பக்க நியாயத்தை சொல்வதற்கு முழு உரிமையும் உள்ளது. ஆனால் அதில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும்.
உலகமே அங்கீகரித்த படைப்பையும், அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்டகாரணங்களுக்காக திருடன், வேலை தெரியாதவர் என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல. அந்த ஊடக பேட்டி முழுக்க உங்களின் உடல்மொழியும், பேச்சுத்திமிரும், வக்கிரமாக இருந்தது.
தங்கள் தயாரிப்பில் வந்த ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தை போன்று அளவுகோலாக வைத்து பருத்திவீரனையும் அதனது படைப்பாளியையும் எடைபோட்டுவிட்டீர்களோ? வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை. இனியும் உங்களுக்கிடையேயான பிரச்சினைகளை அதற்கான பாதையில் நேர்மையாக அணுகி தீர்வு காணுங்கள். பருத்திவீரன் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் அனைவருக்குமிடையே இருந்த நட்பும், உறவும் மீண்டும் மலரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!