கிருஷ்ண ஜெயந்தி பட்சணங்கள் செய்பவர்கள் இதை மறக்காதீங்க... பட்சணங்கள் ருசியாக வரும்!
இன்று கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி, கிருஷ்ணரை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். அடுத்து விநாயகர் சதுர்த்தி வர உள்ளது. தொடர்ந்து பண்டிகை தினங்களாக இருக்கும் நிலையில், பலகாரங்களை கடைகளில் வாங்கி கட்டுப்படியாகாது. வீட்டிலேயே ரொம்ப எளிமையான முறையில், ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும், சுவையாகவும் செய்யலாம். அப்படி வீட்டில் பலகாரங்களைச் செய்பவர்கள் இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.
என்றுமே மவுசு வீட்டு பலகாரங்களுக்கு மட்டும் தான் என்பது அதை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும். சுவை கொஞ்சம் குறையலாம். ஆனால், ஆரோக்கியம் எப்பவுமே அதில் ப்ளஸ் தான். அதனால் வீட்டிலேயே செய்து பழகிக்கோங்க.

பலரும் கடைகளில் வாங்கி உடல் நலக்குறைபாடு ஏற்படுவதில் இருந்து தடுக்க வீடுகளிலேயே செய்ய முயற்சிக்கின்றனர். வீட்டில் பலகாரங்கள் தயாரிப்பதில் பெரிய சவால் சில கவனக்குறைவு தான். இதனை சரியாக செய்து விட்டால் அனைத்துமே சரியாக ஆரோக்கியமாக பண்டிகைகளைக் கொண்டாடலாம். இதற்கு சில விஷயங்களில் மிகவும் கவனம் தேவை.
பலகாரம் செய்ய ஐ.ஆர்.20 பச்சரிசியை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் செய்யும் பலகாரங்கள் தான் சுவையாகவும் மென்மையாகவும் வரும். முறுக்கு தயாரிப்பதற்கு அளவு முழு தானியங்களாக அளப்பது தான் சரியாக இருக்கும். சீடை, பக்கோடா, மாவு உண்டைகளுக்கு அரைத்த மாவை அளவீடு செய்ய வேண்டும்.
மில்லில் மாவு அரைக்க கொடுக்கும் போது தனியாக அரை கிலோ அரிசியை கொடுத்து அரைத்து வாங்கிக் கொண்ட பிறகு பலகாரத்திற்கு தேவையான பொருள்களை அரைத்தால் கலப்படமில்லாத மாவு கிடைக்கும். பலகாரமும் சுவையாக இருக்கும்.மாவு அரைத்த அன்றைக்கே பலகாரம் செய்தால் சுவையும் மணமும் கூடும். அதிரசத்தை பொறுத்தவரை உடனே செய்து விட வேண்டும்.
எல்லா வகை மாவையுமே நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் எண்ணெயில் பொரிக்கும்போது வெடிக்காமல் இருக்கும். முறுக்கு, ரிப்பன் பக்கோடாக்களுக்கு மாவை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து பிசைய வேண்டும் அப்போது தான் எண்ணெய் குடிக்காமல் வரும். பிசைந்த மாவு இருக்கும் பாத்திரத்தில் சிறிது சிறிதாக எடுத்து விட்டு மாவு பாத்திரத்தை மூடிவிட வேண்டும்.

அதிரசம், குலாப்ஜாமூன் வகைகளுக்கு மிதமான சூட்டில் எண்ணெய் இருந்தாலே போதுமானது. பலகாரங்களைச் செய்யும் போது டால்டா, செயற்கை நிறமூட்டிகள் , ஆப்பசோடா இவைகளை தவிர்க்க வேண்டும். அதிரசங்களை டப்பாவில் வைக்கும் போது அடியில் டிஷ்யூ பேப்பர்களை வைத்தால் உபரி எண்ணெயை டிஷ்யூ பேப்பர் இழுத்துக் கொள்ளும். அதிகபட்சமாக ஒரு வாரம், பத்து நாட்களுக்குள் செய்த பலகாரங்கள் தீரும்படி பார்த்துக் கொள்வது அவசியம்.
