இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் - திராவிடர் கழகம் அறிவிப்பு - திமுக ஆதரவு!

 
நீட் தேர்வு நீட் தேர்வு

சமீபத்தில் வினாத்தாள் கசிவு காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள 22 லட்சத்திற்கும் அதிகமான மருத்துவ மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கும், எதிர்காலம் குறித்த அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், நீட் தேர்வு முறையை முற்றிலுமாக கைவிட வலியுறுத்தி திராவிடர் கழகம் இன்று தமிழகம் தழுவிய அளவில் கண்டனப் போராட்டங்களை நடத்தவுள்ளது.

இந்த முக்கியப் போராட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நீட் விவகாரம் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஆர்

சிபிஐ விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், மாணவர்களின் நலன் கருதி மீண்டும் நீட் தேர்வை நடத்துவதைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக, அவசரச் சட்டம் மூலம் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கையை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

நீட் தேர்வு என்பது லட்சக்கணக்கில் பணம் கொடுத்துப் பயிற்சி மையங்களுக்குச் செல்லும் வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது. இது கிராமப்புற, அரசுப் பள்ளி மற்றும் தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கிறது.

நீட் தேர்வில் தொடரும் முறைகேடுகள், மொழிபெயர்ப்புத் தவறுகள் மற்றும் வினாத்தாள் கசிவு ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க, இத்தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

நீட்

திமுக ஆதரவு: இந்த சமூக நீதிப் போராட்டத்தில் திமுகவின் அனைத்து மட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும், மாணவர் அணியினரும் கலந்துகொண்டு தங்களது ஆதரவை வலுப்படுத்த வேண்டும் எனத் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல்.திருமாவளவனும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அரியலூர் அனிதா முதல் தற்போதைய மாணவர்கள் வரை நீட் தேர்வு ஏற்படுத்திய பாதிப்புகளைச் சுட்டிக்காட்டிய அவர், விசிக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்வார்கள் என்று அறிவித்துள்ளார்.

தேசிய அளவில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ள வேளையில், தமிழகத்தில் மீண்டும் நீட் எதிர்ப்பு அரசியல் அலை தீவிரமடைந்துள்ளது. இன்று நடைபெறும் இந்தப் போராட்டம் கல்விச் சுதந்திரம் மற்றும் மாநில உரிமைகளை மீட்டெடுப்பதற்கான முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.