தொடர் மழை.. மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் பயங்கர மண் சரிவு.. பீதியில் மக்கள்..!!
தொடர் மழையால் மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் மண் சரிவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் உள்ள பர்லியாறு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மண் மற்றும் பாறைகள் சாலைகளில் சரிந்து விழுந்து இருப்பதன் காரணமாக, அச்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
குன்னூர் மற்றும் உதகை செல்லும் வாகனங்களும், உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்களும் கோத்தகிரி சாலை வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாலையை சீரமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு இருப்பதை அறியாத மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அச்சாலை வழியாக உதகை செல்ல காரில் வந்தார்.
அப்போது மண் சரிவு ஏற்பட்டு இருப்பதைப் பார்த்த அவர், சாலையிலேயே காத்திருந்தார். கோத்தகிரி சாலை வழியாக சுற்றி செல்ல வெகு நேரம் ஆகும் என்பதால், குன்னூர் சாலை வழியாகவே செல்ல வேண்டி அமைச்சர் எல்.முருகன், மண் சரிவுகள் அகற்றப்பட்டு சாலை சீரமைக்கும் பணிகள் முடிவதற்காக காத்திருக்கிறார். இந்த மண் சரிவு காரணமாக உதகை செல்லும் சுற்றுலா பயணிகள் கோத்தகிரி வழியாக சென்று வருகின்றனர்.