அதிகாலையில் துயரம்... இந்திய வீரர் ரிங்கு சிங் தந்தை காலமானார்!

 
ரிங்கு சிங் தந்தை

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய இளம் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கன்சந்த் சிங் (Khanchand Singh), இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்த ரிங்கு சிங்கின் தந்தை கன்சந்த் சிங், கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக நான்காம் நிலை (Stage 4) கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுப் போராடி வந்தார்.

வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா.. நிதிஷ், ரிங்கு அதிரடி!

புற்றுநோய் பாதிப்பு தீவிரமடைந்ததால், அவர் கிரேட்டர் நோய்டாவில் உள்ள யதார்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று (பிப். 27) அதிகாலை சுமார் 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் இடம்பெற்றுள்ளார். தந்தையின் உடல்நிலை மோசமானதை அடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன் அவர் அணியிலிருந்து விடுப்பு எடுத்துச் சென்று தந்தையைப் பார்த்துவிட்டுத் திரும்பியிருந்தார். நேற்று ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியின் போது அவர் அணியுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் ரிங்கு சிங்

ரிங்கு சிங்கின் தந்தை, அலிகாரில் ஒரு எரிவாயு சிலிண்டர் விநியோகிப்பாளராக பணியாற்றி மிகக் கடுமையான வறுமையிலும் தனது மகனை ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாக்கினார். ரிங்கு சிங் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பின்னரும் கூட, தனது வேலையை அவர் விடாமல் தொடர்ந்தது பலராலும் பாராட்டப்பட்டது.

தந்தையின் மறைவையடுத்து ரிங்கு சிங் மீண்டும் தனது சொந்த ஊரான அலிகாருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.