அசாமில் திடீர் நிலநடுக்கம் - ஜோர்ஹாட் பகுதியில் நில அதிர்வால் மக்கள் அச்சம்!
வடகிழக்கு மாநிலமான அசாமில் நேற்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.2 ஆகப் பதிவாகியுள்ளது.
நேற்று மாலை சரியாக 4:15 மணியளவில் இந்த அதிர்வுகள் உணரப்பட்டன. அசாமின் ஜோர்ஹாட் பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமியின் உட்பகுதியில் சுமார் 35 கி.மீ. ஆழத்தில் இந்த நில அதிர்வு உருவானதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
EQ of M: 3.2, On: 09/04/2026 16:15:26 IST, Lat: 26.689 N, Long: 94.304 E, Depth: 35 Km, Location: Jorhat, Assam.
— National Center for Seismology (@NCS_Earthquake) April 9, 2026
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @GSuresh_NCS @ndmaindia pic.twitter.com/4Wlq51WTe3
இந்த நிலநடுக்கம் மிதமான அளவில் இருந்ததால், பெரிய அளவிலான உயிர்ச் சேதங்களோ அல்லது கட்டிடங்கள் இடிந்து விழுந்தது போன்ற சொத்துச் சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், நில அதிர்வை உணர்ந்த மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறிச் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

அசாம் மாநிலம் அதிக நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ளதால், அங்கு அடிக்கடி இதுபோன்ற நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. கடந்த சில மாதங்களில் அடுத்தடுத்து ஏற்படும் அதிர்வுகளால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
