ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் 7.4 ஆக பதிவு - சுனாமி எச்சரிக்கையால் மக்கள் வெளியேற்றம்!

 
ஜப்பான் நிலநடுக்கம் சுனாமி ஜப்பான் நிலநடுக்கம் சுனாமி

ஜப்பானின் வடக்கு கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கடலோரப் பகுதிகளில் 10 அடி (3 மீட்டர்) உயரம் வரை சுனாமி அலைகள் எழக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் (JMA) தகவல்படி, இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மாலை 4:53 மணிக்கு ஏற்பட்டது. வடக்கு ஜப்பானின் சன்ரிகு (Sanriku) கடற்பகுதிக்கு அருகே பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வு உருவானது. நிலநடுக்கத்தின் தாக்கம் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் டோக்கியோ வரை உணரப்பட்டது. கட்டிடங்கள் பலமாக குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீதிக்கு வந்தனர்.

ஜப்பான் நிலநடுக்கம்

நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே இவாட் (Iwate), அமோரி (Aomori) மற்றும் ஹொக்கைடோ (Hokkaido) ஆகிய மாகாணங்களுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடல் அலைகள் 3 மீட்டர் (10 அடி) உயரம் வரை எழக்கூடும் என கணிக்கப்பட்டது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 1.75 லட்சம் மக்கள் உடனடியாக உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். ஓட்சுச்சி (Otsuchi) மற்றும் காமைஷி (Kamaishi) போன்ற நகரங்களில் சைரன்கள் முழங்க மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இவாட் மாகாணத்தில் உள்ள குஜி (Kuji) துறைமுகத்தில் சுமார் 80 சென்டிமீட்டர் (2.6 அடி) உயரத்திற்கு முதல் சுனாமி அலைகள் மோதியது உறுதி செய்யப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, இந்த இயற்கைச் சீற்றத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. இருப்பினும், அமோரி மற்றும் ஹொக்கைடோ பகுதிகளில் வெளியேற்றத்தின் போது சுமார் 4 பேர் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமோரி மாகாணத்தில் சுமார் 26 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

டோக்கியோ மற்றும் அமோரி இடையேயான ஷிங்கன்சென் (Shinkansen) புல்லட் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பல நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டன. இவாட் மாகாணத்தில் சில நூறு வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ஜப்பானின் புகுஷிமா (Fukushima) உள்ளிட்ட வடகிழக்கு பகுதிகளில் உள்ள அணுமின் நிலையங்களில் இந்த நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அந்தந்த மின் நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. தற்போது இந்த அணுமின் நிலையங்கள் செயல்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான்

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பான் அரசு ஒரு சிறப்பு ஆலோசனையை வழங்கியுள்ளது. ஜப்பான் அகழி (Japan Trench) பகுதியில் வரும் வாரத்தில் 8.0 ரிக்டர் அல்லது அதற்கும் அதிகமான வலிமையுடைய 'மெகா நிலநடுக்கம்' (Mega-quake) ஏற்பட 1% வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இரவு 11:50 மணியளவில் சுனாமி எச்சரிக்கைகள் முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டாலும், அடுத்த சில நாட்களுக்கு நில அதிர்வுகள் (Aftershocks) ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் கடற்கரை ஓரங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.