பூடானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் அதிர்வு!

 
bhutan bhutan

இந்தியாவின் அண்டை நாடான பூடானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பூடான் நாட்டின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 26 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் இயற்கை சீற்றத்தால் மக்கள் பெரும் பயமும் அதிர்ச்சியும் அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

நிலநடுக்கம்

பூடானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் நடுக்கமானது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் பலமாக உணரப்பட்டுள்ளது. அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். பூடானில் இந்த முதல் பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து சில லேசான அதிர்வுகளும் பதிவாகி உள்ளன.

நிலநடுக்கம்

இமயமலைப் பகுதியில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாகப் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு திறந்தவெளிப் பகுதிகளுக்கு ஓடி வந்தனர். பூடான் மற்றும் இந்திய எல்லைப் பகுதிகளில் இந்த நடுக்கம் அச்சத்தை ஏற்படுத்திய போதிலும், அதிர்ஷ்டவசமாகப் பெரிய அளவிலான உயிர்ச்சேதமோ அல்லது பொருள்சேதமோ இதுவரை பதிவாகவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.