மோட்டாரை நகர்த்தியபோது மின்சாரம் பாய்ந்து கொத்தனார் பலி !
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே உள்ள அனவரதநல்லூர் மேலத் தெருவில் வசித்து வருபவர் ராஜதுரை. இவருக்கு வயது 43. ராமசாமி மகனான ராஜதுரை கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ராஜதுரை தனது வீட்டிலிருந்த மின்மோட்டாரை நகர்த்த முயன்றபோது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் மின்மோட்டாரை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மின் கசிவு ஏற்பட்டுள்ளதுடன், அதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றபோதும் உயிர் பிரிந்துள்ளது.

இதுகுறித்துத் தகவல் அறிந்த முறப்பநாடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனைக்காக உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
