"மாதம் ரூ.2,500 உதவித்தொகை - முதியோர்கள், குடும்பத் தலைவிகள் கோரிக்கை!
தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய், தேர்தல் பிரச்சாரத்தின் போது மகளிருக்காக அறிவித்த மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் குறித்து 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் தரப்பிலிருந்து நியாயமான கோரிக்கையும் மறுபரிசீலனை மனுக்களும் எழுந்துள்ளன.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, தவெக ஆட்சிக்கு வந்தால் ஏழை எளிய குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தப் பின்வரும் றிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் தவெக அரசு அமைந்தால், 60 வயதுக்கு உட்பட்ட தகுதியுள்ள குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாதந்தோறும் தலா 2,500 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். இந்தத் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாகக் கூறப்படும் சூழலில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மத்தியில் ஒரு முக்கியக் கேள்வி எழுந்துள்ளது.

"60 வயதுக்கு உட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே இந்த ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 60 வயதுக்கு மேல் இருந்தும் தற்போது வரை எவ்வித அரசு முதியோர் உதவித்தொகையும் பெறாத ஏழைப் பெண்களுக்கு இந்த மாதம் ரூ.2,500 ஏன் கிடைக்காது?" என்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, அரசு இந்த விதியை மறுபரிசீலனை செய்து, முதியோர் பென்ஷன் கிடைக்காத 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களையும் இந்த 2,500 ரூபாய் திட்டத்தில் இணைக்க வேண்டும் எனப் பல்வேறு மகளிர் அமைப்புகளும் பொதுமக்களும் தவெக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பெண்கள் மத்தியில் நாளுக்கு நாள் இந்தத் திட்டம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் வேளையில், குடும்பத் தலைவிகளுக்கான இந்த மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரும் துல்லியமான தேதி மற்றும் அதற்கான தகுதி வரம்புகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழக அரசு இன்னும் வெளியிடவில்லை. இதற்கான அரசாணைத் தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
