ஒரே பெயரில் இருக்கும் மின் இணைப்புக்கள் ஒன்றாக சேர்க்கப்படும்... தமிழக அரசின் அறிவிப்புக்கு அன்புமணி கடும் கண்டனம்!

 
மின்சாரம் eb

ஒரே பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவைகள் இணைக்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்  தமிழ்நாட்டில் ஒருவரின் பெயரில் ஒரே வளாகத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒன்றாக இணைக்க தமிழ்நாடு மின்சார வாரியம், முடிவு செய்துள்ளது.  அத்தகைய மின் இணைப்புகளை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.  ஒருவரின் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் இருந்தாலும் அவை இணைக்கப்படாது; அவற்றுக்கான இலவச மின்சாரம் நிறுத்தப்படாது என தமிழக அரசு தேர்தல்  வாக்குறுதி அளித்திருந்தது. தற்போது அதை மீறும் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.  தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து களப்பணியாளர்களுக்கு  சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில்,‘‘அதிக அளவில் மின்சாரம் பயன்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள வீடுகளில் உடனடியாக அவசரத் தணிக்கை செய்யப்பட வேண்டும். ஏதேனும் வீட்டு வளாகத்தில்  ஒருவரின்  பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்தால் அவை அனைத்தையும்  ஒரே இணைப்பில் கொண்டு வரவேண்டும். அதிக இணைப்புகள் இருந்தால் அவற்றில் ஓர் இணைப்பு 1டி கட்டண விகிதத்திற்கு மாற்றப்பட வேண்டும்’’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அதன் அடிப்படையில்  கடந்த 5  நாட்களாக தமிழகம் முழுவதும் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிய வருகிறது.

மேகதாது அணை குறித்து கர்நாடக அரசுடன் பேச்சு நடத்தக் கூடாது! – டாக்டர் அன்புமணி ராமதாஸ்
ஒரே பெயரில் உள்ள மின் இணைப்புகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்தால் நுகர்வோருக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும். அவ்வாறு இணைக்கப்படும் போது ஒரு வீட்டைத் தவிர, குறிப்பிட்ட வளாகத்தில் உள்ள மற்ற அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம்.  ஓர் இணைப்பு 1டி கட்டணப் பிரிவுக்கு மாற்றப்பட்டால், அந்த இணைப்பில்  யூனிட்டுக்கு ரூ.8.15 கட்டணமாக நிர்ணயிக்கப்படும்.  இது வழக்கமான மின் கட்டணத்துடன் ஒப்பிடும் போது பல மடங்கு அதிகம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருப்பதை தவிர்க்கவே முடியாது. சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் பல பகுதிகளிலும் பலர் தங்களுக்குச் சொந்தமான  நிலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர்.  அத்தகைய வீடுகள் அனைத்தும் ஒருவருக்கு சொந்தமானது என்பதால் அனைத்து வீடுகளுக்குமான மின் இணைப்புகளும் ஒருவர் பெயரில் தான் இருக்கும். சில இடங்களில் வீடுகளின் உரிமையாளர்கள், தங்களுக்குச் சொந்தமான வீடுகளை தங்களின் வாரிசுகளுக்கு பிரித்து வழங்கியுள்ளனர். அதிலும்  கூட பலரும்  மின் இணைப்பின் பெயரை மட்டும் மாற்றாமல் வைத்துள்ளனர். அந்த வீடுகளில் குடி இருப்பதும், மின்சாரத்தைப் பயன்படுத்துவதும் வாடகைக்கு குடியிருப்பவர்கள் தான். அவ்வாறு இருக்க அனைத்து வீடுகளுக்கான மின் இணைப்பையும் ஒன்றாக இணைத்தால் வாடகைக்கு குடியிருப்பவர்கள் வழக்கமாக செலுத்த வேண்டிய ரூ.1125 கட்டணத்திற்கு பதிலாக ரூ.3464 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.  இது 3 மடங்கு  கூடுதலான தொகை.  


2022ல்   மின் இணைப்புகளை ஆதாருடன் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.  ஒவ்வொருவரின் பெயரிலும் எத்தனை இணைப்புகள் உள்ளன என்பதை கணக்கெடுத்து அவை அனைத்தையும் இணைப்பதற்காகவும், வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை நிறுத்தவும் தான் அரசு இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது என்று மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. இது குறித்து  அப்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘‘ஒருவர் எத்தனை மின் இணைப்புகளை வைத்திருந்தாலும், அத்தனை மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். மின் இணைப்புகள் இணைக்கப்படாது. இந்த  வதந்திகளை மின்சார நுகர்வோர்கள் நம்ப வேண்டாம்’’ என விளக்கம் அளித்திருந்தார்.

அன்புமணி ராமதாஸ்

  தேர்தலுக்கு முன்பு வரை ஒரு பேச்சு பேசிய தமிழக அரசும், மின்சார வாரியமும், தேர்தலுக்குப் பிறகு தங்களின் கோரமான உண்மை முகத்தை காட்டுவதை பொதுமக்கள் மன்னிக்க மாட்டார்கள். ஏற்கனவே, சமாளிக்க முடியாத அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டிய தமிழக அரசு, இப்போது மின்னினைப்புகளை இணைக்கத் துடிப்பது பெரும் பாவம்.எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் ஒரே வளாகத்தில் இருந்தால் அவற்றை இணைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, இப்போதுள்ள முறையே தொடர அனுமதிக்க வேண்டும். அத்துடன்  மாதத்திற்கு ஒருமுறை மின்சாரக் கட்டணம் வசூலிக்கும் முறையை உடனே அறிமுகம் செய்ய வேண்டும்  எனக் குறிப்பிட்டுள்ளார். 

From around the web