EMI கட்டாததால் அசிங்கப்படுத்திய ஊழியர்கள்.. மனம் உடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3பேர் எடுத்த விபரீத முடிவு!

 
செவ்வந்தி 

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சொக்கநாதபுரம் தண்ணீர் தொட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் செவ்வந்தி (வயது 60). இவர் டாஸ்மாக் பாரில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஒச்சம்மாளா (வயது 57). இவர்களது மகன் ராஜேஷ் (வயது 30) தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பெற்றோருடன் வசித்து வந்தார். தனியார் நிதி நிறுவனம் மூலம் மோட்டார் சைக்கிள், செல்போன் வாங்கி மாத தவணையாக செலுத்தி வருகின்றனர்.

ஆனால், அந்த தவணையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. நேற்று அந்த வீட்டுக்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பணம் கேட்டு ஒச்சம்மாளை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினர். அவர் பயன்படுத்திய செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளையும் எடுத்துச் சென்றதாக தெரிகிறது. இதை அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் பார்த்ததால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்தார். இரவு வீட்டுக்கு வந்த கணவனிடமும் மகனிடமும்   நடந்ததை கூறி அழுதாள்.

அக்கம் பக்கத்தினர் முன்னிலையில்  அவமானப்பட்டதாக எண்ணி 3 பேரும், இனிமேல் வாழ்வதை விட சாவதே மேல் என  முடிவு செய்து விஷம் குடித்தனர்.
இன்று காலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்ததில் 3 பேரும் இறந்து கிடந்தனர்.

உடனடியாக அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web