தமிழகத்தில் 18-க்கும் மேற்பட்ட இடங்களில் 2 நாட்களாக நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

 
அமலாக்கத்துறை

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு மோசடி மற்றும் அது தொடர்பான சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் குறித்துத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் அதிரடியாக நடத்தப்பட்டு வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள 18-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை கடந்த இரண்டு நாட்களாகத் தீவிரமாக நடைபெற்று வந்தது.

கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வுக்கான மதிப்பெண்களைத் திருத்தி, தகுதியற்ற பலருக்குப் பணி நியமனம் வழங்கியதாகப் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்தத் தேர்வு முறைகேடு மற்றும் முறையற்ற பணி நியமனங்கள் தொடர்பாகச் சுமார் ரூ.50 கோடி வரை சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் கைமாறியிருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், இதன் பின்னணியில் உள்ள சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையினர் தங்களது விசாரணையைத் தொடங்கினர்.

அமலாக்கத்துறை

இதன் தொடர்ச்சியாகவே, நேற்று காலை முதல் முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள், இடைத்தரகர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் இறங்கினர்.

இன்று மதியம் வரை நீடித்த இந்த சோதனையின் முடிவில், பல கோடி ரூபாய் அளவிலான முறைகேடான பணப்பரிமாற்றங்கள், சொத்து முதலீடுகள் மற்றும் வங்கிப் கணக்கு பரிவர்த்தனைகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆவணங்களின் அடிப்படையில், அடுத்தகட்டமாகத் தொடர்புடைய நபர்களுக்குச் சம்மன் அனுப்பி நேரில் விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.