திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவி மீதே தாக்குதல் - இபிஎஸ் கண்டனம்!

 
ஸ்டாலின் எடப்பாடி

மாற்றுத்திறனாளிகள் நடத்திய போராட்டத்தின் மீது காவல்துறை நடத்திய தாக்குதல் மற்றும் சிபிஐஎம் மூத்த தலைவர் கே. பாலகிருஷ்ணனின் மனைவி ஜான்சிராணி காயமடைந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உதவித்தொகை உயர்வு கோரி மாற்றுத்திறனாளிகள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையின் போது, காவல்துறை வன்முறையில் ஈடுபட்டதாகவும், மாற்றுத்திறனாளிகள் என்றும் பாராமல் அவர்களை அலைக்கழித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

எடப்பாடி

இந்தத் தாக்குதலில் மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவரும், திமுகவின் கூட்டணிக் கட்சியான சிபிஐஎம்-ன் மூத்த தலைவர் தோழர் கே. பாலகிருஷ்ணனின் மனைவியுமான பா. ஜான்சிராணி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, பாசிச மனோபாவம்: கோரிக்கைக் குரல்களை ஒடுக்க நினைப்பது முதலமைச்சர் ஸ்டாலின் அரசின் பாசிச மனோபாவத்திற்குச் சான்றாகும். கூட்டணி கட்சித் தலைவருக்கே இந்நிலை. திமுக கூட்டணிக் கட்சித் தலைவரின் மனைவியே காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகும் நிலைதான் இன்று தமிழகத்தில் நீடிக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் மீது கருணையின்றி நள்ளிரவு முழுவதும் அலைக்கழித்து, அவர்களின் அடிப்படை உரிமைகளை மறுத்துத் தாக்குதல் நடத்திய திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மாற்றுத்திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்