தேர்வில் காப்பி அடித்ததாகக் கூறி 8ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர்... சிகிச்சை பலனின்றி பரிதாப மரணம்!

 
8

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் தேர்வு எழுதிய போது சக மாணவனுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக எட்டாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. பள்ளியில் தேர்வு நடைபெற்ற போது மாணவி காப்பி அடித்ததாகக் கூறி ஆசிரியர் அவரை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் மாணவியின் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு உண்டானதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி சாகுப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 13 வயதுடைய க்ஷமா தீட்சித் ஆவார். இவர் அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். சம்பவ தினத்தன்று தேர்வு எழுதிய போது ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து, உதவி ஆசிரியர் ராஜேந்திர குமார் கங்வார் என்பவர் மாணவியை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு கைகளில் கடுமையான வலி ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து மாணவியின் தந்தை உமேஷ் தீட்சித் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.