சென்னையில் பரபரப்பு.. யாரோ செய்த தவறுக்கு அப்பாவியை கொலை செய்த கொடூர நிகழ்வு..!
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகர் பகுதி பி ப்ளாக் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு வயது 39. டிவி மெக்கானிகாக வேலை செய்து வரும் இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் , ஒரு மகன் உள்ளனர். ராஜா சம்பவத்தன்று வேலை முடித்து வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட கும்பல் ராஜாவிடம் வம்பிழுத்து அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். ராஜாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர்.
மக்கள் வருவதைக் கொண்ட கும்பல் தப்பி ஓடினர். பொதுமக்கள் கும்பலை துரத்தவே 5 பேரும் தப்பித்து ஓட கோபி என்ற ஒருவனை மட்டும் மடக்கி பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்துவந்த பெரும்பாக்கம் காவல்துறையினர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய ராஜா மற்றும் பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த கோபி இருவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு டியோ சத்யா என்ற நபரை 'சி' பிளாக்கை சேர்ந்தவர்கள் தாக்கி உள்ளனர். இதற்கு பழிக்குப்பழி வாங்க தனது நண்பர்களுக்கு மது வாங்கி கொடுத்து அங்கு வந்த ராஜாவிடம் வேண்டும் என்றே தகராறு செய்து கொலை செய்தது தெரியவந்தது. டியோ சத்யாவை யாரோ தாக்கியதற்கு, பழிக்குப்பழி வாங்குவதாக நினைத்து அதே பகுதியை சேர்ந்த அப்பாவியான ராஜாவை வெட்டிக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் தப்பி ஓடிய 5 பேரில் பெயிண்டரான அஜித்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது மாமல்லபுரம் காவல்நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது. மருத்துவமனையிக் சிகிச்சை பெற்று வரும் கோபி மீதும் மாமல்லபுரம் மற்றும் பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.