காலையிலேயே பரபரப்பு... எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் ஓ.பி.எஸ்? - ஆதரவு எம்.எல்.ஏ.வும் ராஜினாமா?!

 
ஓபிஎஸ்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு 'அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு' என்ற அமைப்பை நடத்தி வரும் ஓ. பன்னீர்செல்வம், இன்று பிப்ரவரி 27ம் தேதி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை தலைமைச் செயலகத்திற்குச் சென்று, சபாநாயகர் அப்பாவு அவர்களைச் சந்தித்துத் தனது ராஜினாமா கடிதத்தை வழங்க ஓ.பி.எஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ராஜினாமா செய்வதற்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்திக்கவும் அவர் நேரம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த பிப்ரவரி 20ம் தேதியே அவர் முதலமைச்சரைச் சந்தித்துத் தேர்தல் சூழல் குறித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ் ஸ்டாலின்

ஓ.பி.எஸ் ஆதரவாளரான உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பனும் தனது பதவியை இன்று ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இவருடைய மற்றொரு ஆதரவாளரான வைத்திலிங்கம் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்து திமுகவில் இணைந்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்-ஐ மீண்டும் கட்சியில் சேர்க்கவோ அல்லது கூட்டணியில் வைக்கவோ திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்குக் கடுமையான சவாலை அளிக்க வேண்டும் என்ற நோக்கில், திமுகவுடன் கைகோர்க்கும் ஒரு முயற்சியாகவே இந்த ராஜினாமா பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா ஓபிஎஸ்

ஓ. பன்னீர்செல்வம் இன்று திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைவாரா அல்லது திமுக கூட்டணியில் அவருக்குத் தொகுதி ஒதுக்கப்படுமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் வெளியாக வாய்ப்புள்ளது.