காட்டு யானையில் இருந்து கும்கி யானையாக மாறிய பிரபல மூர்த்தி யானை.. திடீரென உயிரிழந்ததால் பெரும் சோகம்..!
1998ல் கேரளாவில் 23 பேரை கொன்றுள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டில் மக்னா ஆண் யானை கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் 23 பேரை கொன்றது. அதனை சுட்டுக் கொல்ல கேரளா வனத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்திற்குள் நுழைந்தது.
இதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தமிழக வனத்துறை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து மூன்று கும்கி யானைகள் உதவியுடன் வாச்சுகொல்லி என்ற இடத்தில் வைத்து யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு வரப்பட்டது.
அதன் உடலில் குண்டு காயங்கள் உள்ளிட்ட பல்வேறு காயங்கள் இருந்த நிலையில் தெப்பகாடு வன கால்நடை மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி கண்ணும் கருத்துமாக கவனித்து சிகிச்சை அளித்து காப்பாற்றினார். இதனால் மிகவும் மூர்க்கமாக இருந்த யானை சாதுவாக மாறிப்போனது. இதனால் மருத்துவரின் நினைவாக அந்த யானைக்கு மூர்த்தி என பெயரிடப்பட்டது.
கும்கி ஆக மாறிய மூர்த்தி பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து வயது முதிர்வின் காரணமாக கடந்த ஆண்டு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் கடந்த ஓராண்டாக யானைக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. இதற்காக சிகிச்சைகள் எடுத்து எடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தது. பிரேத பரிசோதனைக்கு பின் இன்று மூர்த்தி யானை அடக்கம் செய்யப்பட உள்ளது.