ரசிகர்கள் அதிர்ச்சி... சச்சின் டெண்டுல்கர் டீப் பேக் வீடியோ!
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி டீப் ஃபேக் தொழில்நுட்பத்தின் மூலமாக சச்சின் டெண்டுல்கர் போன்று பேசி வீடியோ வெளியாகி உள்ளது, ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் டீப் ஃபேக் எனும் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் வீடியோக்கள் பெரும் தலைவலியாக உருவாகி வருகிறது. குறிப்பாக பிரபல நடிகர்கள் உள்ளிட்டோரின் முகங்களை வைத்து போலியான வீடியோக்களை தயாரிப்பது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இந்த தொழில்நுட்பத்தின் பாதிப்பால் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, நடிகை கஜோல் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களின் முகங்களை பயன்படுத்தி ஆபாச வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
Sachin Tendulkar's #Deepfake video viral #SachinTendulkar ➡️Sachin Tendulkar's AI generate video goes viral #SachinTendulkar #deepfake #Deepfake AI pic.twitter.com/MbK4a43Psu
— Neha Bisht (@neha_bisht12) January 15, 2024
இதே போல் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை பிரியங்கா சோப்ரா, தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகியோரின் முகங்களை கொண்டு மோசடி ஆப்களுக்கு விளம்பரம் செய்வது போன்று வீடியோக்கள் தயாரித்து பரபரப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு சார்பில் டீப் ஃபேக் தொழில் நுட்பத்தை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்போது பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உருவம் மற்றும் குரலை பயன்படுத்தி இந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது. சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர் பயன்படுத்தி வரும் ஒரு ஆப் மூலமாக பணம் சம்பாதிக்க முடியும் என சச்சின் கூறுவது போல் அந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.