அதிகாலையில் சோகம்... மரத்தில் கார் மோதி தந்தை, மகள் உள்ளிட்ட 3 பேர் மரணம்!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள ஆண்டிப்பட்டிக் கோட்டை அருகே இன்று அதிகாலையில் சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கர வேகத்தில் கார் மோதி உருக்குலைந்து விபத்துக்குள்ளானது. இதில் தந்தை, மகள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள ஆண்டிப்பட்டிக் கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று இன்று ஜூலை 22ம் தேதி அதிகாலை 3.30 மணியளில் மரத்தில் மோதியதில் படுகாயமடைந்த தந்தை, மகள் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த தாயும், மகனும் கரூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மரத்தின் மீது பயங்கர வேகத்தில் மோதிய கார் உருக்குலைந்ததால், விபத்துக்குள்ளான காரில் இருந்து, காரை ஓட்டி வந்தவரின் சடலத்தை அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரர்கள் கிரேன் உதவியுடன் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர். இந்த விபத்துக் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அரவக்குறிச்சி போலீசார், விபத்துக் குறித்து வழக்குப்பதிவு செய்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு சூளை ஜிகேஆர் நகரை சேர்ந்தவர் நடராஜ். இவர் மகன் கிருஷ்ணகுமார் (40). இவர் ஈரோட்டில் இருந்து திருச்செந்தூருக்கு தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் காரில் சென்றுள்ளார். அங்கு நேற்று சாமி தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரிலிருந்து ஈரோட்டுக்கு நேற்றிரவு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள ஆண்டிப்பட்டிக் கோட்டை அருகே இவர்களது கார் வந்துக் கொண்டிருந்த போது, இன்று ஜூலை 22ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் பயங்கர வேகத்தில் மோதியது.
இதில் காரை ஓட்டி வந்த கிருஷ்ணகுமார், அவர் மகள் வருணா (10), மாமியார் இந்திராணி (67) ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.கிருஷ்ணகுமார் மகன் சுதர்சன் (15), மனைவி மோகனா (40) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரை ஓட்டி வந்த கிருஷ்ணகுமாரின் சடலம் காரில் சிக்கிக் கொண்டதால் அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தினர் சுமார் 1 மணி நேரம் போராடி கிரேன் உதவியுடன் சடலத்தை மீட்டனர்.