சென்னை ரயில் நிலையத்தில் தீ விபத்து.. அலறியடித்த பயணிகள்!
சென்னையில் பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து கிண்டி ரயில் நிலையம் செல்லும் வழியில் ரயில்வே பாதையில் டிரான்ஸ்பார்மர் உயர் மின்னழுத்தம் காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதைப் பார்த்த பொதுமக்கள் கிண்டி தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அறிந்த கிண்டி தீயணைப்புத் துறை அணைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
ரயில் பாதையில் திடீர் தீ விபத்து காரணமாக 20 நிமிடங்களுக்கு மேலாக தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ரயில்வே பாதையின் பக்கத்தில் 5 அடி உயரத்தில் புல் வளர்ந்து வெயிலின் காரணமாக காய்ந்து சருகாகி இருந்த நிலையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததாக தெரிய வந்துள்ளது.
உடனடியாக ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் வந்த நிலையில் அருகில் உள்ள தனியார் கட்டிடத்தில் இருந்து பணியாளர்கள் தண்ணீர் ஊற்றி நெருப்பினை அணைக்கும் முயற்சியில் தற்சமயம் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் காய்ந்து புல் அதிகளவில் இருப்பதால் தொடர்ந்து தீ மளமளவென எரிந்து வருகிறது. ரயில்வே பாதையில் இரு புறங்களிலும் வளர்ந்திருக்கும் புல் செடிகளை முறையாக வெட்டி பராமரிக்காத காரணத்தால், தீ பிடித்து எரிந்ததா அல்லது பொதுமக்கள் யாரேனும் நெருப்பு வைத்து சென்றனரா என்கிற கோணத்திலும் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ரயில் கடந்து செல்லும் பொழுது ஏற்படும் காற்றின் வேகத்தால் தீ பரவக்கூடும் என்பதால் தற்சமயம் மின்சார ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தீ அணைக்கப்பட்ட பின்னரே தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரைக்கு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.