மதுபோதை தகராறில் மீனவர் வெட்டிக்கொலை... பெரும் பரபரப்பு!
தூத்துக்குடி தாளமுத்து நகர் ஆனந்த் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மாரிச்செல்வம் என்ற 21 வயது இளைஞர் மீனவராக வேலை செய்து வந்தார். இவர் மீது ஏற்கனவே சில அடிதடி வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதே பகுதியைச் சேர்ந்த சந்தனராஜ், புவனேஷ் குமார், மரிய அந்தோணி ஜாய்சன் மற்றும் ஹரிஹர சுதன் ஆகிய 22 வயதுடைய நபர்கள் மாரிச்செல்வத்தின் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு இவர்கள் அனைவரும் தாளமுத்து நகர் நேரு காலனியில் உள்ள ஒரு காலி இடத்தில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது மது போதையில் இருந்த நண்பர்களுக்கு இடையே திடீரென வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே, மாரிச்செல்வம் தனது நண்பரான சந்தனராஜை அடித்துள்ளார். இதனால் மற்ற நண்பர்கள் அனைவரும் கோபமடைந்து மாரிச்செல்வத்துடன் சண்டையிட்டுள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த அவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாரிச்செல்வத்தைச் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், படுகாயமடைந்த மாரிச்செல்வத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொலை வழக்கு தொடர்பாகச் சந்தனராஜ் உள்ளிட்ட 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்து, தப்பியோடிய மற்றொருவரைத் தேடி வருகின்றனர்.
