தொடரும் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம்.. 10 கோடி அளவில் ஏற்றுமதி பாதிப்பு..!
![மீனவர்கள் போராட்டம்](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/f71d7c9599d45b408a265c4194c3a608.jpg)
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. இதில் 3,500 மீனவர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். முழுமையாக மீன்பிடி தொழிலை நம்பியே இவர்களின் வாழ்வாதாரம் உள்ளது.இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்படகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர்.
அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கி இன்றுடன் 5-வது நாளாக நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக ரூ.10 கோடி மதிப்பிலான இறால் மீன்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்து பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 1-ந்தேதி ராமேசுவரத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.