விடுதி இரவு உணவைச் சாப்பிட்ட 40 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டம் டிட்வா கிராமத்தில் இயங்கி வரும் பள்ளி விடுதியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் பயின்று வருகின்றனர். வழக்கம் போல் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு இரவு நேர உணவு பரிமாறப்பட்டது. அங்கு வழங்கப்பட்ட இரவு உணவைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே 40 மாணவர்களுக்கும் திடீரெனக் கடும் வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் அடுத்தடுத்து அசெளகரியத்திற்கு ஆளாகி மயங்கி விழுந்ததால் விடுதி காப்பாளர்கள் பெரும் பதற்றமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.
உடனே சுதாரித்துக் கொண்ட பள்ளி நிர்வாகத்தினர், பாதிக்கப்பட்ட 40 மாணவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் மருத்துவர்கள் அவசரச் சிகிச்சைப் பிரிவில் தீவிரச் சிகிச்சைகளை அளித்தனர். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
மாணவர்களின் உடல்நிலை சீராக இருந்தாலும் மருத்துவர்கள் குழு தொடர்ந்து அவர்களைக் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த அரசு அதிகாரிகள் உடனடியாகப் பள்ளிக்கு விரைந்து வந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்கள் சாப்பிட்ட இரவுக் உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு, உணவின் தரம் குறித்து ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. பள்ளி விடுதியில் உணவு விஷமாக மாறியதா அல்லது சமையலில் அலட்சியம் காட்டப்பட்டதா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
