கேரளத்தில் பெண்களுக்கு இலவசப் பேருந்து... நாளை முதல் 'பிரியதர்ஷினி' திட்டம் அமல்!
தமிழகத்தைத் தொடர்ந்து அண்டை மாநிலமான கேரளாவிலும் பெண் பயணிகளின் நீண்ட நாள் கனவை நனவாக்கும் வகையிலான புதிய இலவசப் பேருந்து பயணத் திட்டம் நாளை முதல் அதிகாரபூர்வமாக அமலுக்கு வரவுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி முக்கிய வாக்குறுதியை அளித்திருந்தது. தாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு முற்றிலும் கட்டணமில்லா இலவசப் பயணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தனர்.

தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றுப் புதிய அரசு அமைத்துள்ள நிலையில், தங்களது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 'பிரியதர்ஷினி' என்ற புதிய திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 7 வகையான சாதாரண மற்றும் நகரப் பேருந்துகளில் பெண்களும், திருநங்கைகளும் எவ்விதக் கட்டணமும் இன்றி நாளை முதல் முற்றிலும் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கேரள அரசின் இந்த நடவடிக்கையால், அம்மாநிலத்தில் அன்றாடம் வேலைக்குச் செல்லும் ஏழை எளிய பெண்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் சுயஉதவிக் குழுவினர் தங்களது மாதாந்திர போக்குவரத்துச் செலவுகள் பெருமளவு குறைந்து ஒட்டுமொத்தமாகப் பொருளாதார ரீதியாகப் பயனடைவார்கள் என்பதால், கேரள மக்கள் மத்தியில் இத்திட்டத்திற்கு வரவேற்புக் கிளம்பியுள்ளது.
