அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவச உணவு... முதல்வர் உத்தரவு!

 
அம்மா உணவகம்

 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன் தினம் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக  மாநகரின் பல்வேறு சாலைகளிலும் நேற்று மழை நீர் தேங்கியது. இதனால் சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்து சென்றதால் பல்வேறு பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
 


குறிப்பாக பள்ளிக்கரணை, கண்ணகி நகர், துரைப்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், ராம்நகர், பெருங்குடி, பெரும்பாக்கம், முடிச்சூர்  உள்ளிட்ட  இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகினர். தாழ்வான இடங்களில் வசித்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  வைக்கப்பட்டனர். சென்னையில் யானைக்கவுனி, பட்டாளம், பெரம்பூர் , புளியந்தோப்பு  பகுதிகளை முதல்வர் ஆய்வு செய்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் அறிவித்துள்ளார்.  

அம்மா உணவகம்


இதுகுறித்து எக்ஸ் தளத்தில்  “நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை - எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.