ககன்தீப் சிங் பேடி தந்தை காலமானார்... முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

 
ஸ்டாலின்


தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி. இவரது  தந்தை தர்லோச்சன் சிங் பேடி மறைவிற்கு  தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஃபரித்கோட் அரசு கல்வியியல் கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய தர்லோச்சன் சிங் பேடி, திருக்குறள் மீது மிகுந்த பற்று கொண்டவராக விளங்கினார்.

மனிதர்கள் மீதான அன்பை மையப்படுத்தியதாகவே திருக்குறள் திகழ்கிறது; அதனையேதான் குருநானக் பிரசாரம் செய்தார்" என்று கூறிய அவர், குறளின் கருத்துகளை எடுத்துச்சொல்லும் தூதுவராக, திருக்குறளைப் பஞ்சாபி மொழியில் மொழிபெயர்த்தார். அவரது இந்தப் பணி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மிகச் சிறந்த அறிஞராக விளங்கிய அவரது மறைவு, தமிழ்நாட்டுக்கும் பஞ்சாப் மாநிலத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

தந்தையை இழந்து வாடும் ககன்தீப் சிங் பேடிக்கும், அவரது பிரிவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன்  முதல்வர், ககன்தீப் சிங் பேடியை தொலைபேசியில் அவரை தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார்.