ஆடு, கோழிகளை திருடி கஞ்சா அடிக்கும் கல்லூரி மாணவர்கள்... சீரழியும் இளைய சமுதாயம்!!

 
கஞ்சா புகைக்க ஆடு கோழிகளை திருடிய இளைஞர்கள்
கஞ்சா புகைப்பதற்காக கோழி மற்றும் ஆடுகளை திருடி விற்பனை செய்து வந்த இளைஞர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

 ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே கருக்கம்பாளியை சேர்ந்தவர் தவசியப்பன் (58). விவசாயம் செய்து வரும்  இவர் சேவல் மற்றும் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 அடையாளம் தெரியாத வாலிபர்கள் ஆடு மற்றும் சேவல்களை திருடிச் சென்றுள்ளனர். இதனைப் பார்த்த  தவசியப்பன் திருடர்களை விரட்டிச்சென்று பிடிக்க முயன்றார்.

அப்போது, அவரை உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு அந்த நபர்கள் தப்பினர். இதில் படுகாயமடைந்த தவசியப்பன் கோபிச்செட்டிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தவசியப்பன் அளித்த புகாரின் பேரில் கோபிச்செட்டிப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

கோபிசெட்டிபாளையம் 2023 | giriblog

மேலும், நம்பியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோசனம் கிராமத்தில் நாச்சிமுத்து என்பவரது ஆடு, ஆலாம்பாளையத்தை சேர்ந்த சாந்தாமணி என்பவருக்கு சொந்தமான ஆடு, கடத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கரட்டுப்பாளையத்தை சேர்ந்த வெங்கடாசலம் என்பவருக்கு சொந்தமான 4 ஆடுகள், சிறுவலூர் காவல் நிலைய பகுதியில் 2 ஆடுகள், 4 சேவல்கள் என அடுத்தடுத்து திருடு போனது. இது குறித்து கோபிச்செட்டிப்பாளையம் , சிறுவலூர், நம்பியூர், கடத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கருக்கம்பாளியில் தவசியப்பனை தாக்கி விட்டுச்சென்ற இருவர் குறித்த சிசிடிவி காட்சிகள் கோபிச்செட்டிப்பாளையம் காவல்துறையினருக்கு கிடைத்தது. அதை வைத்து அந்த இருவரை தேடி வந்தனர். நேற்று மாலை கோபி அருகே உள்ள கல்ராமணி பிரிவில் கோபி காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் காவல்ரகள் ஜெகநாதன், சகாயராஜ், தலைமை காவலர்கள் சதாசிவம், பெருமாள் உள்ளிட்ட தனிப்படை காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது அவ்வழியாக 2 ஸ்கூட்டர்கள், ஒரு பைக்கில் 3 ஆடுகள் மற்றும் ஒரு சேவலுடன் வந்தவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்ய தனிப்படையினர் முயற்சித்தனர். அப்போது 3 பேரும் இருசக்கர வாகனங்களை விட்டுவிட்டு தப்பியோட முயன்றனர். இதைத்தொடர்ந்து தப்பியோடிய 3 பேரையும் தனிப்படை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். அப்போதுதான் அவர்கள் அடுத்தடுத்து ஆடு மற்றும் சேவல்களை திருடிய கும்பல் என்பது தெரிய வந்தது.

அவர்களில் ஒருவர் கோபிச்செட்டிப்பாளையம் சாய் அபிராமி நகரை சேர்ந்த கவின் (19) என்பதும், சத்தியமங்கலம் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. சி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருவதும், மற்றொருவர் கோபி அருகே சிறுவலூர் அங்கம்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ரஞ்சித்குமார் (21) என்பதும், சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. சி.இ 4-ம் ஆண்டு படித்து வருவதும், மற்றொருவர் கோபி அருகே கரட்டடிபாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி குமரேசனின் மகன் ஹரி பிரசாத் (20) என்பதும், கோபியில் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்தது.3 பேரும் சில கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து கோபியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். அங்கு மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து கஞ்சா புகைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். கஞ்சா போதை பொருளை வாங்குவதற்காக பணம் தேவைப்பட்ட போதெல்லாம் இரு சக்கர வாகனங்களில் சென்று ஆடு மற்றும் சேவல்களை திருடி விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருமானம் முழுவதையும் கஞ்சாவிற்கு செலவு செய்து வந்துள்ளனர்.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த கோபிச்செட்டிப்பாளையம் காவல்துறையினர் 8 ஆடுகள், 2 சேவல்களை பறிமுதல் செய்தனர். 3 மாணவர்களும் கோபி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1-ல் ஆஜர்படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். 

From around the web