கோவை லாட்ஜில் இளம்பெண் கொலை...காதலன் சொன்ன அதிர்ச்சி தகவல்!
கோவை அருகே சின்னியம்பாளையம் பகுதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி ஒன்றில் இளம்பெண் அடித்துக் கொலைச் செய்யப்பட்து தொடர்பாக காதலனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அடித்துக் கொன்றதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகே சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்று முன்தினம் மாலையில் இளம்பெண் ஒருவரும் வாலிபரும் வந்து தங்கி உள்ளனர். பின்னர் நேற்று அதிகாலை வாலிபர் மட்டும் வேகமாக விடுதி அறையை விட்டு, வெளியேறுவதை கண்ட விடுதி ஊழியர்கள், சந்தேகம் அடைந்து அவர்கள் தங்கி இருந்த அறைக்குச் சென்று பார்த்தனர். அங்கு தங்கி இருந்த இளம்பெண் முகத்தில் காயமடைந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து உடனடியாக பீளமேடு காவல் நிலையத்திற்கு விடுதி ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். பீளமேடு போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் அந்த பகுதியில் சுற்றி திரிந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் இன்ஸ்பெக்டர் தமிழரசு தலைமையிலான தனிப்படையினர் விசாரித்தனர்.
விசாரணையில் அவர் சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூரை சேர்ந்த சரவணன்(29) என தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் விடுதியில் இறந்து கிடந்த பெண் கோவை எஸ்.எஸ்.குளம் அருகே கள்ளபாளையம் பகுதியை சேர்ந்த கீதா (26) என்பதும், கோவை அவினாசி ரோட்டில் ஒரு மகளிர் விடுதியில் தங்கி இருந்து, ஜிம்மில் பயிற்சியாளராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

கீதாவும், சரவணனும் காதலித்து வந்துள்ளனர். வீட்டிற்குத் தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் திருமணத்தை பதிவு செய்யவில்லை. கீதாவும், சரவணனும் அண்ணன், தங்கை உறவுமுறை என தெரிகிறது. இதனால் அவர்களது திருமணத்தை குடும்பத்தினர் ஏற்கவில்லை. இருந்தாலும் கீதாவும், சரவணனும் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இதே போல் அறை எடுத்து விடுதியில் தங்கி இருந்த போது, சரவணனுக்கும், கீதாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கீதாவின் நடத்தையிலும் சரவணன் சந்தேகம் அடைந்துள்ளார். நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரம் அடைந்த சரவணன் கீதாவின் முகத்தில் கையால் குத்தி தலையை சுவற்றில் மோதச் செய்ததாக தெரிகிறது. இதில் பரிதாபமாக கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சரவணனைக் கைது செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவையில் தங்கும் விடுதியில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
