மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.1,440 குறைந்திருந்த நிலையில், இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாகத் தங்கத்தின் விலை ஆடுபுலி ஆட்டம் ஆடி வருவதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.230 உயர்ந்து ரூ.14,050-க்கு விற்பனையாகிறது. தங்கம் சவரன் ரூ.1 லட்சத்தைத் தாண்டியதில் இருந்தே நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ள நிலையில், இந்தத் திடீர் விலை உயர்வு அவர்களுக்கு மேலும் ஒரு பேரிடியாக அமைந்துள்ளது.

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.270-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ.2,70,000-க்கு விற்பனையாகிறது. போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் காரணமாகத் தங்கம் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுவதால், அதன் தேவை அதிகரித்து விலை உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. நகை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள் இந்தத் தொடர் விலை மாற்றத்தால் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
