மீண்டும் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் நடுத்தரக் குடும்பங்களின் முக்கியச் சேமிப்பாக விளங்கும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, கடந்த சில நாட்களாகக் கடும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்று ஜூன் 13-ம் தேதி சற்று உயர்ந்துள்ளது. கடந்த வாரம் சரிவை நோக்கிச் சென்ற தங்கத்தின் விலை, மீண்டும் ஏறுமுகத்தில் பயணிக்கத் தொடங்கியிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையின் இன்றைய நிலவரப்படி, பொதுமக்கள் அதிகம் விரும்பும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.13,860-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.110,880-க்கும் விற்கப்படுகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.110,400-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று இந்த திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த ஜூன் 4-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.115,840 என்ற உச்சத்தைத் தொட்ட நிலையில், அடுத்த 11 நாட்களில் ஒட்டுமொத்தமாக ரூ.4,000 வரை குறைந்திருப்பது சற்று நிம்மதியளிப்பதாக உள்ளது.

மறுபுறம், வெள்ளியின் விலை எளிய மக்கள் வாங்க முடியாத அளவிற்கு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் 10, 11 ஆகிய தேதிகளில் ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2,60,000-க்கும் விற்பனையான நிலையில், நேற்று கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்தது. அதன் தொடர்ச்சியாக, இன்றும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.270-க்கும், ஒரு கிலோவுக்கு மேலும் ரூ.5,000 உயர்ந்து ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
