குட் நியூஸ்... சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு - அரசாணை வெளியீடு!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அளித்த வாக்குறுதியின்படி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பினால் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும், தற்போது பணியில் இருப்பவர்களும் பெரும் பயன் அடைய உள்ளனர்.
சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கான மாத ஓய்வூதியம் 2,000 ரூபாயிலிருந்து 3,400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. குறு அங்கன்வாடி மற்றும் வன களப்பணியாளர்களது சிறப்பு ஓய்வூதியம் 2,000 ரூபாயிலிருந்து 3,200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கான ஓய்வூதியம் 2,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக உயர்கிறது.

ஓய்வு பெறும்போது வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகையிலும் கணிசமான உயர்வு செய்யப்பட்டுள்ளது. சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 1 லட்சம் ரூபாய், இனி 2 லட்சம் ரூபாயாக வழங்கப்படும். அதேபோல், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட 50 ஆயிரம் ரூபாய், தற்போது 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சிறப்பு ஓய்வூதியம் பெற்று வருபவர்கள் இறக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிதியுதவியும் முறைப்படுத்தப்பட்டுள்ளது: சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 1,200 ரூபாய் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். குறு அங்கன்வாடி மற்றும் வன களப்பணியாளர்களின் குடும்பங்களுக்கு 1,100 ரூபாய் வழங்கப்படும். சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு 1,000 ரூபாய் வழங்கப்படும். பணியாளர் உயிரிழக்க நேரிட்டால், இறுதிச் சடங்கு செலவுகளுக்காக வழங்கப்படும் நிதி 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
