எல்லையில் பதற்றம்...!! தமிழக பேருந்துகள் நடுவழியில் நிறுத்தம்!!

 
அரசு பேருந்து

தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவின்  முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு. இவர் மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இவர்  முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுத்த வகையில்   ரூ118 கோடி  ஊழல் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வரும்  நிலையில் சந்திரபாபு நாயுடுவை போலீசார் இன்று கைது செய்தனர். நந்தியாலா பகுதியில் நேற்று கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற சந்திரபாபு நாயுடு தனது வாகனத்தில் இரவு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, இன்று அதிகாலை 3 மணியளவில் நந்தியாலா போலீஸ் டிஐஜி தலைமையில் அதிக அளவிலான போலீசார் சந்திரபாபுவை கைது செய்ய சென்றனர். 

அரசுப் பேருந்து

ஆனால், அங்கு கூடியிருந்த தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல், சந்திரபாபு நாயுடு எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படைப்பிரிவின் பாதுகாப்பில் உள்ளதால் சட்டப்படி அதிகாலை 5.30 மணிவரை அவரை அழைத்து செல்ல அனுமதிக்க முடியாது என்று எஸ்பிஜி படைப்பிரிவினர் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து காத்திருந்த போலீசார், சந்திரபாபு நாயுடுவை காலை 6 மணிக்கு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு விஜயவாடா அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் கைதை கண்டித்து அவரது ஆதரவாளர்களும் தெலுங்கு தேச கட்சியின் தொண்டர்களும் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் பேருந்துகள் தாக்கப்பட்டுள்ளது.  

சந்திரபாபு நாயுடு

இதனால் தமிழ்நாடு எல்லையோரங்களிலும் பதற்றம் நிலவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு இயக்கப்படும் தமிழ்நாடு மற்றும் ஆந்திர பேருந்துகள் அனைத்தும் அந்தந்த பேருந்து நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆந்திராவிலிருந்து தமிழ்நாடு வரும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் இருந்து வேலூர் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு இயக்கப்படும் 40 தமிழ்நாடு அரசுப் பேருந்துகள், 63 ஆந்திர மாநில அரசு பேருந்துகள், 27 தனியார் பேருந்துகள் எனத் தற்போதைக்கு மொத்தம் 130 பேருந்துகள் ஆந்திராவிற்கு இயக்கப்படவில்லை. பேருந்து போக்குவரத்து தடைப்பட்டதால் ஆந்திரா செல்லும் பயணிகள் மற்றும் தமிழ்நாட்டிற்குத் திரும்பும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையில் ஒரு சில தனியார் பேருந்துகள் மட்டும் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை இயக்குவதாகத் தெரிவித்துள்ளனர்.

From around the web