வீட்டில் 79 சிலிண்டர்களைப் பதுக்கி வைத்த மளிகைக் கடைக்காரர்.. அதிக விலைக்கு விற்பனை!

 
வணிக சிலிண்டர் வணிக சிலிண்டர்

சேலம் மாவட்டம் தேவூர் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர்களை சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்த கும்பலை உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சர்வதேச அளவில் நிலவும் போர்ச் சூழலால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதைப் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்ட முயன்ற கும்பலின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள பெரமாச்சிப்பாளையம் பகுதியில், சங்கர் (55) என்பவரது மளிகைக் கடையிலும் அவரது வீட்டிலும் சட்டவிரோதமாக சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி ரமேஷ்குமார் தலைமையிலான குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.

வணிக சிலிண்டர்

சோதனையின் போது சங்கரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டு உபயோக சிலிண்டர்கள் 13,வர்த்தக ரீதியான சிலிண்டர்கள் 66 என மொத்தம் 79 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சிலிண்டர்களைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட ஒரு சரக்கு வேனும் பறிமுதல் செய்யப்பட்டது. 

இந்தச் சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்ட  பெரமாச்சிப்பாளையத்தைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் சங்கர் (55), சேலத்தைச் சேர்ந்த வசந்த் (சிலிண்டர்களை விநியோகம் செய்தவர்), சரக்கு வேன் ஓட்டுநர் பிரபு ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிலிண்டர்

விசாரணையில், சேலத்தில் இருந்து வசந்த் மற்றும் பிரபு ஆகியோர் சிலிண்டர்களை மொத்தமாக வாங்கி வந்து சங்கரிடம் கொடுத்துள்ளனர். சங்கர் அவற்றை மளிகைக் கடையில் பதுக்கி வைத்து, தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது.

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தி வரும் போர் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாகச் சேலம் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக நிலவும் கடும் எரிவாயு தட்டுப்பாட்டை இந்த கும்பல் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.