சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாடு - HCL ஊழியர்களுக்கு மீண்டும் 'வொர்க் ஃபிரம் ஹோம்' அறிவிப்பு!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, தனது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியபிரபல ஐடி நிறுவனமான HCL அனுமதித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வமாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.
ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி எரிவாயுவுக்கு உலக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்கப் பல நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், HCL நிறுவனம் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டால் ஊழியர்கள் அலுவலகம் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் சில நிறுவனங்கள் போக்குவரத்துச் செலவைக் குறைக்கவும், எரிபொருள் சிக்கனத்திற்காகவும் இந்த முறையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளன.
எரிபொருள் பற்றாக்குறையினால் அலுவலக கேண்டீன்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் உணவு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டும் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்குமாறு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் டீசல் பயன்பாட்டைக் குறைக்கவும், மின்சாரத்தைச் சேமிக்கவும் தங்கள் நாட்டு ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியப் பரிந்துரை செய்துள்ளன. அந்த வரிசையில் இப்போது தனியார் ஐடி நிறுவனங்களும் இணையத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
