தமிழகத்தில் பிப்.23 வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!

 
மழை

தமிழகத்தில் நாளை முதல் பிப்.23-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நாளை வலுப்பெறக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை கடலோர தமிழகம், தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழக பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மழை

21-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 22-ம் தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 23-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்களில் நாளையும், நாளை மறுதினமும் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் 19 முதல் 21-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.