திருவாரூரில் நெகிழ்ச்சி... பள்ளிவாசல் திறப்புக்கு சீர்வரிசையோடு சென்ற இந்து மக்கள்!
திருவாரூர் மாவட்டத்தில், இஸ்லாமியர்கள் மதவழிபாடு நடத்துவதற்காக புதிதாக திறக்கப்பட்ட பள்ளிவாசலுக்கு, அந்த பகுதியில் வசித்து வரும் இந்து மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சீர்வரிசை எடுத்து சென்று வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதத்தின் பெயரால் தங்களை பிளவுபடுத்த நினைக்கும் சக்திகளுக்கு அவ்வப்போது சவுக்கடி கொடுத்து வருகிறார்கள் மக்கள். அப்படியானதொரு சம்பவம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கடியாச்சேரியில் நிகழ்ந்துள்ளது.
இஸ்லாமிய பள்ளிவாசலுக்கு இந்துக்களின் சீர்வரிசை! 'பிரமிப்பு அடைய வைத்த திருவாரூர் மக்கள்' 'மதம் என பிரிந்தது போதும்..' pic.twitter.com/wN4hP4htH1
— ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) February 2, 2024
கடியாச்சேரியில் இஸ்லாமியர்கள் புதிதாக பள்ளிவாசல் ஒன்றைக் காட்டியுள்ளனர். இதன் திறப்பு விழாவில், கலந்துகொள்ள சாதி மத பேதமின்றி ஊரில் உள்ள அனைவருக்கும் இஸ்லாமியர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். அவர்களின் அழைப்பை ஏற்று மத நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் மதித்துப் போற்றும் விதமாக கடியாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பிற மதத்தினரும் பள்ளிவாசல் திறப்பு விழாவில் திரளாக கலந்து கொண்டார்கள்.
ஊர் மக்கள் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில், சீர்வரிசை பொருட்களையும் எடுத்து சென்று இஸ்லாமியர்களை கட்டித் தழுவி தங்களது உறவினர்கள் போல் அன்பை வெளிப்படுத்தினர்.